இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இய‌ற்கையு‌ம் ம‌னிதனு‌ம் - அ‌ம்மா‌வி‌ன் அருளுரை

Go down

இய‌ற்கையு‌ம் ம‌னிதனு‌ம் - அ‌ம்மா‌வி‌ன் அருளுரை Empty இய‌ற்கையு‌ம் ம‌னிதனு‌ம் - அ‌ம்மா‌வி‌ன் அருளுரை

Post by Admin Sun Feb 07, 2010 2:29 pm

கேள்வி : ஆத்திகர்கள் அல்லவா பூஜைக்காகப் பூக்களைப் பறிப்பது, மிருகங்களைப் பலியிடுவது, இயற்கையை அழிப்பது போன்றவற்றைச் செய்கிறார்கள்?


அம்மா : "இறைவா! அடுத்த வீட்டுக்காரனைக் குருடனாக்க வேண்டும், அவன் வேலையை இழக்கச் செய்ய வேண்டும், அவனை அழிக்க வேண்டும்" என்பதுபோல் பிரார்த்தனை செய்பவர்களை ஆத்திகர்கள் என்று அழைக்கக்கூடாது. தனது நலனிற்காக இறைவனை அவர்கள் ஒரு கருவியாக ஆக்குகிறார்கள். துரோக சிந்தனை உள்ளவர்களின் கடவுள் நம்பிக்கை, தூய பக்தியிலிருந்து தோன்றுவதல்ல. அது தனது காரியம் நடப்பதற்காகக் காட்டும் பொய்யான நம்பிக்கையாகும்.

உண்மையான பக்தன் இறைவனின் நோக்கத்தை உணர்ந்து, அதற்கேற்பச் செயல்படுவான். இடதுகை காயமடைந்தால் வலதுகை ஆறுதல் அளிக்க வருவதுபோல், பிறரது துயரைக் கண்டு, தன்னை மறந்து உதவ ஓடிச்செல்லும் மனோபாவம் அவனுக்கு இருக்கும். உண்மையான ஆத்திகன் இயற்கையையும், மனிதரையும் இறைவனின் பிரத்யட்ச வடிவமாகக் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யவும், அன்பு செலுத்தவும் செய்கிறான். அவன் யாரையும் தன்னிலிருந்து வேறுபட்டவராகக் காண்பதில்லை. பிறரது குற்றம், குறைகளைக் காணாமல், பிறரது தவறுகளை மன்னிக்கும் திறனுள்ள இதயத்தில்தான் இறைவனால் வசிக்க முடியும்.

அந்த அளவு கருணை உள்ள மனமுடைய ஒருவனால் இறைவனைத் திருப்திப்படுத்துவதற்காக எங்ஙனம் மிருகபலியும், பிறவும் நடத்த முடியும்? தனது மனதில் உள்ள மிருகத்தனமான வாசனைகளையே அவன் இறைவனுக்குப் பலியிடுவான். தனது அகந்தையையே கொல்வான்.

குழந்தைகளே, ஹிம்சை என்பது இயற்கை நியதியின் ஒரு பாகமாகும். அதை முற்றிலும் நீக்கமுடியாது. தனது உணவிற்காக வேட்டையாடுவதையும், இதுபோன்ற பிறவற்றையும் அதர்மம் என்று கூறமுடியாது. ஆனால், தேவைக்கதிகமாக எதையும் அழிப்பது ஹிம்சையாகும். ஒருவன் கஞ்சி குடிப்பதற்காக ஒரு பலா இலையைப் பறிப்பது தவறல்ல. ஆனால் அதற்காக ஐந்தாறு இலைகளைப் பறிப்பது அதர்மமாகும். இவ்வாறு, இறைவனுக்குப் பூஜை செய்வதற்காகச் செடிகளை நட்டு, நீர்விட்டு வளர்ந்து அவற்றிலிருந்து பூக்களைப் பறிப்பதைத் தவறென்று கூறமுடியாது.

துளசிச் செடிக்கு நீர்விடும்போது பக்தன் ஒருவன் ஸ்ரீ கிருஷ்ணனையே வணங்குகிறான். அரச மரத்தைச் சுற்றிவரும் போதும், பசுவிற்குப் புல் கொடுக்கும் போதும் அவனது மனம் கிருஷ்ணனிடம்தான் லயித்திருக்கிறது. வில்வ மரத்திற்கு உரமிடுகையில் அது சிவனை மகிழ்விக்கும் என்றே சிவபக்தன் நம்புகிறான். இயற்கையை வழிபடுவதன் மூலம் பன்மை நிறைந்த இவ்வுலகில் உள்ள ஏகமான மெய்ப்பொருளைத் தரிசிக்க அவனால் முடிகிறது.

வழிபடுவது என்றால் தொட்டு வணங்கி, நமஸ்கரிப்பது என்பதல்ல, பறவை மிருகங்களையும், செடிகொடிகளையும் அன்போடு கவனிப்பது, பராமரிப்பதும் முன்பு இறை வழிபாட்டின் ஒரு பாகமாக இருந்தது. காலையில் எழுந்ததும் குளத்தில் குளித்துவிட்டு வந்து துளசிச் செடி, அரச, வில்வ மரங்களுக்கு நீர்விட்டு வலம் வந்து வணங்குவதும், அகல்விளக்கில் எண்ணெய் ஊற்றி, விளக்கேற்றி இறை நாமங்களைப் பாடுவதும், சூரிய உதயகாலத்தில் கிழக்கு நோக்கி நின்று சூரிய நமஸ்காரம் செய்வதும் உடல் மற்றும் மனதின் சோர்வைப் போக்கவும், புத்திக்கு உற்சாகம் மற்றும் ஆரோக்கியத்தை நல்கவும் மிகவும் உதவின.

தினசரி அனுஷ்டானங்களின் ஒரு பாகமாக இருந்த இவை நம் முன்னோர்களின் கவனத்தையும், விவேக புத்தியையும் வளர்த்துக்கொள்ள உதவின. இதுபோன்ற அனுஷ்டானங்களின் மூலம் மனதின் இறுக்கம் அகன்று, அமைதியும், நிம்மதியும், உற்சாகமும் கிடைக்கிறது. இன்று நம்மில் எத்தனை பேர் தினமும் சூரிய உதயத்தையும், பூக்கள் மலர்வதையும் பார்க்கிறோம்? பறவைகளின் கலகலவென்ற சப்தத்தைக் காது கொடுத்துக் கேட்பவர் எத்தனை பேர்?

கேள்வி : மதங்களின் பெயரால் நடந்த உயிர்பலியை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

அம்மா : சரியான தத்துவ உணர்வை மக்களிடையில் எடுத்துச் செல்ல இயலாதிருந்ததே மிருக பலியும், நரபலியும் பிறவும் ஒரு காலத்தில் பழக்கத்திலிருந்ததன் காரணமாகும். முன்காலத்தில் மத நூல்கள் மக்களிடையே பிரசாரம் செய்யப்படவில்லை. பண்டிதர்களான பிராமணர்கள் அவற்றைப் பாதுகாத்து வைத்தனர். சாதாரண மக்கள் தங்களுக்குத் தோன்றிய விதத்தில் இறை வழிபாடு செய்து திருப்தியடைந்தனர்.

அம்மா ரீயூனியனுக்குச் சென்றபோது அங்குள்ள ஒரு மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். பழங்காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவிலிருந்து ரீயூனியனிற்கும், மொரீஷியஸிற்கும் அடிமைகளாக ஆட்களைக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு அங்குள்ள மொழி தெரியாது. அவர்கள் தாங்கள் கேட்டதைப் பேசிப்பேசிப் பழகியதால் ஒரு புதிய மொழி உருவாயிற்று. அதுபோல், அறிவுள்ளவர் செய்துவந்த ஆசார, அனுஷ்டானங்களைக் கண்ட சாதாரண மக்கள் அவர்களுடைய ரீதியில் ஒவ்வொன்றையும் செய்தனர். பின்னர் வந்தவர்கள் அதைப் பின்பற்றினர், அவ்வளவே.

நமக்கு மிக விருப்பமான பொருளைத்தான் இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். பல வருடங்கள் காணாதிருந்த ஒரு நண்பன் திடீரென ஒருநாள் வீட்டிற்கு வந்தால் நாம் அவனை எப்படி வரவேற்போம்? நண்பனுக்கு விருப்பமான உணவு வகைகளை எல்லாம் எவ்வளவு விரைவில் தயாரித்துக் கொடுப்போம்? ஒரு நண்பனது விஷயத்தில் அப்படி என்றால், அன்பே வடிவான இறைவனின் விஷயத்தில் எப்படி இருப்போம்?

வேட்டையாடி வாழ்ந்துவந்த காட்டுவாசிகளுக்குப் பறவை, மிருகங்களின் மாமிசம் மிக விருப்பமானவையாகும். அதை அவர்கள் இறைவனுக்குச் சமர்ப்பித்தனர். பால் பாயஸத்தை விரும்பியவர்க்ள அதை இறைவனுக்குப் படைத்தனர். பால் பாயஸத்தைக் குறித்துக் கேள்விப்படாதவரால் அதை எப்படி படைக்க முடியும்? அவர்கள் தங்கள் உணவான மாமிசத்தைப் பகவானுக்குப் படைத்தனர். அதை அவர்களின் சந்ததியினரும் பின்பற்றினர். சரியான அறிவைப் பெற்றவர்கள் இவர்களுக்குத் தேவையான தத்துவத்தை உபதேசிக்கவில்லை.

உண்மையில் நமது மனதை இறைவனுக்குச் சமர்ப்பிக்குமாறுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால், மனம் என்பது எடுத்துக் கொடுக்கக்கூடிய ஒரு பொருளல்ல. அதனால் மனம் எதை மிகவும் விரும்புகின்றதோ, அதைச் சமர்ப்பிக்கும் போது மனதைச் சமர்ப்பிப்பதற்குச் சமமாகிறது. அதுவே யாகங்களின் போது செல்வத்தைத் தானம் செய்வதன் தத்துவம். மனிதனின் மனம் செல்வத்தையல்லவா அதிகம் விரும்புகிறது?

ஒவ்வொருவரும் அவரவர் அறிந்த விதத்தில், தங்கள் இயல்புக்கேற்ப இறைவனை வழிபட்டனர். ரிஷிகள் தேவியைத் தூய சத்துவ வடிவமாகக் கொண்டு வணங்கினர். பணத்தை விரும்பியவர்கள் லஷ்மியாக, செல்வத்தின் தேவதையாகக் கண்டனர். மாணவர்கள் சரஸ்வதியாக எண்ணி வழிபட்டனர். போர் வீரர்களும், காட்டுவாசிகளும் காளியாக வாளும், சூலமும் ஏந்தியவளாகத் தேவியை வணங்கினர். எல்லாம் ஒரே சக்திதான். ஒவ்வொருவரும் தங்கள் மனோபாவத்திற்கேற்ப அதற்கு வடிவம் கொடுத்தனர். எல்லாம்வல்ல இறைவனால் எந்த வேடமும் அணிய முடியும்.

அதனால் இறைவனையோ, மத தத்துவங்களையோ குறைகூறுவதால் பயனேதுமில்லை. மதத்தின் பெயரால் சமூகத்திற்கும், இயற்கைக்கும் எதிரான ஏதாவது அனாசாரங்கள் இருக்கின்றதெனில், சரியான தத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சரியான பாதைக்குக் கொண்டுவரவே நாம் முயற்சிக்க வேண்டும். காலக்கிரமத்தில் ஏற்பட்ட அனாசாராங்களின் பெயரால் மத தத்துவங்கள் முழுவதையும் தவறெனக் கூறுவது என்பது, ஒரு போலி மருத்துவர் தவறான மருந்தை எழுதிக் கொடுத்த காரணத்தால், ஒரு நோயாளி இறந்துவிட்டால் என்பதால், எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவது போன்றது. குழந்தையைக் குளிப்பாட்டிய பின், நீருடன் குழந்தையையும் தூர எறிந்துவிடுவதற்கு நிகராகும் இது.

(இய‌ற்கையு‌ம் ம‌னிதனு‌ம் பு‌த்தக‌த்‌தி‌லிரு‌ந்து)
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 37

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum