இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விமர்சனம் செய்வது முட்டாள்களின் வேலை - பரமஹம்ஸ நித்யானந்தர்

Go down

விமர்சனம் செய்வது முட்டாள்களின் வேலை - பரமஹம்ஸ நித்யானந்தர் Empty விமர்சனம் செய்வது முட்டாள்களின் வேலை - பரமஹம்ஸ நித்யானந்தர்

Post by Admin Sun Feb 07, 2010 2:31 pm

நாம் எல்லோருமே நமக்குள்ளே இருக்கிற தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு முயற்சி செய்கின்றோம். எங்கு சென்றாலும், நம்முடைய அடையாளத்தை நிரூபிக்க முயற்சி செய்கின்றோம்.

ஒரு மனிதர் வந்து, "என்னை இந்தக் கிராமமே முட்டாள், முட்டாளென்று சொல்கின்றது. நீங்கள் எப்படியாவது இதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்று சொன்னார்.

ஞானி கேட்டார் : "கிராமம் முட்டாள் என்று சொன்னால், அதற்கென்னப்பா? அதைப்பற்றிக் கவலைப்படாதே".

இவர் சொன்னார் : "இல்லை, இல்லை சாமி, எல்லோரும் சொல்லிச் சொல்லி, இப்போது நானுமே அதை நம்ப ஆரம்பித்துவிட்டேன். எப்படியாவது காப்பாற்றுங்கள்".

அவர் மிகவும் அழகாகச் சொன்னார் : "ஒரே வாரத்தில் இந்தக் கிராமமே உன்னை புத்திசாலி என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் சொல்வது ஒன்றை மட்டும் செய்" என்றார்.

இந்த மனிதருக்கு ஒரே ஆச்சரியம். "ஒரே வாரத்தில் மாற்றிவிடுவீர்களா? அப்படியென்றால், என்ன சொன்னாலும் செய்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள்".

அதற்கு அவர் சொன்னார் : "எதைப் பார்த்தாலும் விமர்சனம் செய்".

எதையுமே ஏற்றுக்கொள்ளாதே.

யாராவது ஒருவர் உட்கார்ந்து, "என்ன அழகான ரோஜா!" என்று சொன்னால், "ஹா!, இதில் என்ன இருக்கிறது? இது என்ன பெரிய அழகு, இதில் எத்தனை முள் பார்த்தாயா?" என்று சொல்.

இல்லை யாராவது ஒருவர், "என்னப்பா ரோஜா இது? இவ்வளவு முள்ளாய் இருக்கிறது?" என்று சொன்னால், "முள்ளை ஏன் பார்க்கிறாய்? இவ்வளவு பெரிய பூ இருக்கே! அதைப்பார்" என்று சொல்.

யாராவது ஒருவர், "என்ன அழகான நிலா!" என்று சொன்னால், "ச்சே! என்ன பெரிய நிலா. நடுவில் பார் கறுப்பு கறுப்பாக இருக்கிறது. களங்கமெல்லாம் இருக்கிறது. ஒளி மாதிரி, சூரியன் மாதிரியாகவா இருக்கிறது? நடுவில் ஏகப்பட்ட களங்கம் இருக்கிறது" என்று சொல்.

யாராவது ஒருவர், "அழகான வெள்ளை வேட்டி!" என்று சொன்னால், "வெள்ளை பெரிய நிறமா? சிவப்பு எவ்வளவு அழகாய் இருக்கும். இதென்ன பெரிய வெள்ளை? வேலையில்லாதவன் கட்டுகின்ற துணி" என்று எதையாவது ஒன்றைப் பிடித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்யத் துவங்கு.

எதையாவது ஒன்றைப் பற்றி குற்றம் கண்டுபிடிக்கத் துவங்கு.

"யார் என்ன சொன்னாலும், ஒரு வாரத்திற்கு விமர்சனம் செய்" என்று சொல்லிவிட்டு, அந்த ஞானி அவருடைய யாத்திரையைத் தொடர்ந்தார். யாத்திரையை முடித்துத் திரும்பி ஒரு வாரம் கழித்து அந்த ஞானி வந்தார்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, ஒரு பெரிய வேப்பமரம் தெரிந்தது. அந்த மரத்திற்குக் கீழ் ஊர் பஞ்சாயத்துக் கூடுகிற இடத்தில், இந்த முட்டாளாகக் கருதப்பட்ட அந்த மனிதர், ஊர் சபையில் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார்.

சுற்றிலும் அந்த ஊர்ப் பெரியவர்கள், அமைதியாக நின்றுக் கொண்டிருந்தார்கள்.

அதுவரை, அவரை "முட்டாள்!, முட்டாள்!" என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் இவர் சொல்வதை மிகவும் பவ்யமாக, மரியாதையோடு அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த ஞானி வேக வேகமாக அந்தக் கூட்டத்திற்குள் வந்தார். வந்தவுடனே, அந்தப் பழைய முன்னாள் முட்டாளைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார். "நான் உங்களோடு பேசலாமா?" என்று ஊர் ஊர்ப் பெரியவர்களின் நடுவேயிருந்த முன்னாள் முட்டாளைக் கேட்கிறார்.

உடனே அவர், "கொஞ்ச நேரம் காத்திருங்கள். பிறகு வேண்டுமானால் பார்க்கலாம். நான் முதலில் இவர்களையெல்லாம் பார்த்துவிட்டு, கடைசியாக உங்களைப் பார்க்கிறேன்" என்று சொன்னார்.

பார்க்க வேண்டியவர்களை எல்லாம் பார்த்து முடித்தார். ஊர்ப் பெரியவர்களும் போய்விட்டார்கள். போனவுடனே, இந்த முன்னாள் முட்டாள் நேராய் வந்து இந்த ஞானியினுடைய காலில் விழுந்தான்.

ஞானி கேட்டார் : "என்னப்பா நடந்தது? எனக்கே ஒன்றும் புரியவில்லை. எப்படி இப்படி எல்லாம் தலைகீழானது?" என்று கேட்டார்.


இதற்கு அவர் சொன்னார் : நீங்கள் சொன்னது அவ்வளவு துல்லியமாக இருந்தது. நான் ஒன்றுமே செய்யவில்லை. எதைப் பார்த்தாலும் விமர்சனம் செய்து கொண்டிருந்தேன். அவ்வளவுதான். மக்கள் தானாகவே என்னைப் புத்திசாலி என்று ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவுதான் எனக்குத் தெரியும்".

இதுதான் அந்தஸ்தால் வருவது. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இரண்டே இரண்டு மனநிலைதான் உலகத்தில் உண்டு. உலகத்தில் இரண்டே இரண்டு விதமான தலைமைப் பண்புடைய மனிதர்கள்தான் இருக்கிறார்கள்.

நடக்கின்ற அனைத்தையும் விமர்சித்து‌க் கொண்டே இருப்பவர்கள், வெளி உலகமாகட்டும், அல்லது உள் உலகமாகட்டும், தனக்கு என்ன நடந்தாலும் விமர்சிப்பது. என்ன நடந்தாலும் குறைபட்டுக் கொள்வது. இது ஒருவகை.

மற்றொன்று, என்ன நடந்தாலும் ஆனந்தப்படுவது, என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்வது. இந்த இரண்டே வகைதான் உலகத்தில் இருக்கிறார்கள்.

ஒன்று,
என்ன நடந்தாலும்
விமர்சிப்பது.
மற்றொன்று
என்ன நடந்தாலும்
வரவேற்பது.

என்ன நடந்தாலும் விமர்சிப்பது என்ற மனம் உடையவர்களைத்தான், அந்தஸ்தால் தலைவனாக மாறினாலும், உணர்வாலே அடிமையாக வாழ்பவர்கள் என்று குறிப்பிடுகிறோம். அவர்கள் நரகத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நரகத்திற்குத் தனியாகப் போக வேண்டியதில்லை. அவர்கள் இருக்கின்ற இடமே நரகமாகத்தான் இருக்கும்.

என்ன நடந்தாலும் ஆனந்தப்படுபவர்கள், என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் சொர்க்கத்திற்குத் தனியாகப் போக வேண்டியதில்லை. காரணம் அவர்கள் இருக்கின்ற இடமே சொர்க்கமாக, ஆனந்தபுரியாக இருக்கும்.

என்ன நடந்தாலும் விமர்சித்துப் கொண்டிருப்பது என்பது இதுதான். எந்த வாழ்க்கையானாலும் சரி, அது வெளி உலகமாகட்டும், உள்ளுலகமாகட்டும், அதில் என்ன நடந்தாலும், "ச்சே, இப்படி நடந்திருக்கலாமில்லை, இந்த ஒரு விஷயம் மட்டும் சரியாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என்று சொல்வது.

அப்படி விமர்சிப்பதனால், வெளி உலகத்தில் வேண்டுமானால் ஒரு சில விஷயங்கள் சாதித்துவிட்ட மாதிரி இருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கை நரகமாகவும், துக்கமயமாகவும் இருந்து கொண்டே இருக்கும். சில நேரத்தில் நாம் துக்கத்தில் இருக்கிறோம் என்பதையே, நாம் மறந்துவிடுவோம்.

அந்தஸ்து எனும் தினவெடுத்து, தினவெடுத்து, நாம் துக்கத்தில்தான் இருக்கின்றோம் என்று உணர முடியாத அளவிற்கு, இவர்களின் உணர்வு அலுத்துப் போய்விடுகின்றது. இவர்களை, இவர்களே காப்பாற்ற முடியுமா? என்பதே பெரிய கேள்விக்குறிதான். இப்படிப்பட்ட தலைவர்கள் மட்டுமல்ல, மனிதர்களும் கூட, இந்த மாதிரி துக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதையே மறந்துபோய் விட்டார்கள். இவர்களின் மனமே உணர்வற்றதாகிவிட்டது. இதுதான் ஒருவருக்கு நடக்கக்கூடாத கொடுமை.

மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்று, இந்த உணர்வற்ற மனத்தை உருவாக்கியது.

என்ன நடந்தாலும் விமர்சிக்கின்ற மன அமைப்பு உடையவர்கள், எங்குமே உலகத்தில் நிம்மதியாய் வாழ முடியாது.

விமர்சனம் செய்கின்ற மன அமைப்புதான் முட்டாள்தனம். அவர்கள் இருக்கின்ற இடமே நரகம். அது அவர்களுக்கும், அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் என இரண்டு பேருக்குமே நரகம்தான்.

விமர்சிக்கும் ஒருவர் போதும். ஒரு நகரத்தையே நரகமாக்கிவிட முடியும். இப்படிப்பட்ட நபர்களைக் கண்டால், எட்டுக்காத தூரத்திற்கு ஓடிவிட வேண்டும்.

அவர்களே அவர்களுக்குப் போதுமானவர்கள். உங்களிடம் இந்த குணம், துளிகூட இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது போதும்.
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 38

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum