இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி

Go down

இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி Empty இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி

Post by Admin Sun Feb 07, 2010 2:33 pm

கேள்வி : அம்மா, மனிதனுக்கும், இறக்கைக்குமுள்ள உறவு என்ன?

அ‌ம்மா : மகனே, மனிதன் இயற்கையிலிருந்து வேறுபட்டவனல்ல. அவன் இயற்கையின் அங்கமாவான். உண்மையில் இயற்கையை நாம் பாதுகாக்கவில்லை; இயற்கைதான் நம்மைப் பாதுகாக்கிறது. பூமியில் இயற்கையைச் சார்ந்தே மனிதன் உயிர் வாழ்கிறான். காற்றைத் தூய்மைப்படுத்துதல் நடக்கவேண்டுமெனில் மரம், செடி, கொடிகள் தேவை. சுற்றுப்புறம் தூய்மையை இழக்கும்போது நம்முடைய ஆரோக்கியம் கெடுகிறது; பலவித நோய்களுக்கு அடிமையாகிறோம். இயற்கையில் ஏற்படும் எந்த மாற்றமும் மனிதனைப் பாதிக்கிறது. அதுபோலவே, மனிதனின் செயல்களும், சிந்தனை அலைகளும் இயற்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இயற்கையின் சமநிலை தறவினால் மனித வாழ்வின் சமநிலை தவறும். அதேபோல், மனிதனின் சமநிலை தவறும்போது இயற்கையின் சமநிலையும் தவறும்.

கேள்வி : மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலுள்ள உறவு உருக்குலையக் காரணம் என்ன?

அம்மா : மனிதனின் களங்கமற்ற தன்மையே அவனை இயற்கையுடன் பிணைக்கும் சங்கிலியாகும். வானவில்லைக் காணும்போது, கடல் அலைகளைக் காணும்போதும் சிறு குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சி நமக்கு ஏற்படுவதுண்டா? சுயநலம் அதிகரிக்கும்போதும், குருட்டுப்புத்தி வளரும்போதும் நமது களங்கமற்ற தன்மை அழிகிறது. அப்போது மனிதன் இயற்கையை விட்டு விலகுகிறான். இயற்கையைச் சுரண்ட ஆரம்பிக்கிறான். இயற்கைக்குக் கலக்கம் உண்டாக்குவதன் மூலம் தனது அழிவிற்குத் தானே காரணமாகிறான் என்பதை அவன் அறிவதில்லை.

மனிதனுடைய குழந்தைப் பருவத்தின் கள்ளங்கபடமற்ற தன்மையை என்றென்றும் நிலைநிறுத்த உதவுவது இறை நம்பிக்கையாகும். இறைபுத்தியும், நம்பிக்கையுமுள்ள ஒருவன் இயற்கையின் ஒவ்வொரு பொருளிலும், பறவை, மிருகங்களிலும் தனது இஷ்ட தெய்வத்தையே தரிசிக்கிறான். இயற்கையுடன் அவன் இணங்கிவாழ வல்லவனாக இது வழிசெய்கிறது. உண்மையான இறை நம்பிக்கையுள்ள ஒருவரிடமிருந்து சர்வ சராசரங்களை நோக்கிப் பெருகிவரும் அன்பானது, இயற்கையின் உள்ளத்தைக் குளிர்விக்கிறது. அதுதான் உண்மையான இயற்கைப் பாதுகாப்பாகும். இன்று மனிதன் தனது சுயநலத்தால் இயற்கையைத் தன்னிலிருந்து வேறுபட்டதாகக் காண்கிறான்.

இரண்டு கைகளும் என்னுடையவையே என்ற உணர்வு இருப்பதால்தான் இடதுகையில் காயம்பட்டால் வலது கை ஆறுதலளிக்க முன்வருகிறது. தனது கையிடம் காட்டுவது போல், மற்றொரு மனிதரின் கையில் காயம்பட்டால் நாம் அன்பு காட்டுவதில்லை. அது என் கையல்ல என்ற எண்ணமே இதற்குக் காரணமாகும். இன்று இயற்கையைத் தனது சுயநலத்தை நிறைவேற்றும் கருவியாகவே மனிதன் காண்கிறான். அறிவியல் வளர்வதற்கேற்ப, விஷயங்களை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள முயல்வதற்கேற்ப மனிதனின் பரந்தமனப்பான்மை அழிந்து வருவதையே நாம் காண்கிறோம்.

பத்து தக்காளி கிடைக்கும் செடியிலிருந்து நூறு தக்காளியை விளைவிக்க அவன் படித்தான். அதன் பருமனை இருமடங்காக்கவும் அவனுக்கு முடிந்தது. விளைச்சல் அதிகரித்தபோது ஏழ்மை குறைந்தது என்பது சரிதான். ஆனால், ஒரு இடத்தில் பட்டினி மரணம் குறைந்தது எனில், மற்றொருபுறம் புதிய நோய்களால் நூற்றுக்கணக்கில் மனிதர்கள் அணு அணுவாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். புதிய காய்கறிகள் பசியை நீக்கியதோடு கூட, உடலின் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியும் அழி‌த்துவிட்டது.

செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் உணவுடன் செல்வதன் மூலம் ஏற்படும் பின்விளைவைப் பற்றி நாம் சரியாக உணரவில்லை. இந்த ரசாயனப் பொருள்கள் உடலிலுள்ள உயிரணுக்களை அழிக்கின்றன. அவனை நோய்களுக்கு அடிமையாக்குகின்றன. வழக்கத்திற்கு மாறாக விளைச்சலை அதிகரித்ததுடன் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அறிவியல் வளர்ச்சி பெற்றது என்றாலும், அதன் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து செயல்படுவதற்கு, சுயநலத்தால் மனிதன் முன்வர மறுக்கிறான்.

விவசாயத்திற்கு செயற்கை உரங்களை உபயோகிக்கக் காரணம் மனிதனின் சுயநலமே அன்றி, பயிர்கள் மீது அவன் கொண்ட அன்பல்ல. ஒரு பலூனை ஊதுவதற்கு எல்லை உண்டு. அளவுக்கதிகமாக ஊதினால் பலூன் வெடித்துவிடும். அதுபோல் ஒரு விதை அளிக்கும் விளைச்சலுக்கு எல்லை உண்டு. அதைச் சிந்திக்காமல் செயற்கை உரங்களையும், பிறவற்றையும் சேர்த்து விளைச்சலை அதிகரிக்கச் செய்தால் விதையின் சக்தியும், குணமும் குறையும். அதை உண்ணும் மனிதனின் உயிரணுக்களையும் அது மோசமாகப் பாதிக்கும். பழங்காலத்தில், விவசாயத்திற்கு நீரும், இயற்கை உரமும் மட்டும் போதுமானதாக இருந்தது. இன்றோ, மருந்தடிக்க வேண்டும். செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தி போய்விட்டது. அவற்றின் நோய் எதிரப்பு சக்தி அழிக்கப்படுகிறது. அனைத்தையும் மரியாதையுடன் அன்பு செய்யவே மதம் கூறுகிறது. அறிவியல், அனைத்தையும் இருமடங்கு உண்டாக்கக் கண்டுபிடித்தது. ஆனால், அதில் அவ்வளவு குணமில்லை. இட்லியில் ஈஸ்ட் சேர்த்து இருமடங்கு பெரியதாக்கும்போது இட்லியின் குணம் குறையத்தானே செய்யும்?

கோழிக்கு ஹார்மோன் ஊசி போட்டு பெரிய முட்டையைப் பெறுவார்கள். இருளடைந்த கூண்டில் அடைத்துவைத்து தினசரி இரண்டு முட்டைகளை இடச் செய்வர். இதன் பயன் என்ன? கோழியின் ஆயுள் பாதியாகக் குறையும். நாட்டு முட்டையின் சத்து இந்த முட்டைக்கு வரவும் வராது. லாப நோக்கத்தால் மக்களின் நன்மையைக் குறித்து மனிதன் சிந்திப்பதில்லை. எதன்மீதும் கருணை தோன்றுவதில்லை. உற்பத்தியை அதிகரிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, அதேசமயம், அனைத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது. பண ஆசையால் அந்த எல்லையைக் கடந்து செல்வது இயற்கையை அழிப்பதற்கு நிகராகும்.


பறந்து அருகில் வரும் கிளிகளை, நமது மன மகிழ்ச்சிக்காகக் கூண்டில் அடைத்து வைப்பது போலவே, இயற்கையை நம்முடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறோம். இது இயற்கையைச் சிறையில் அடைப்பதற்கு நிகராகும். இயற்கையின் மூச்சுத் திணறல் மனித குலத்தின் அழிவிற்குக் காரணமாகும். மனிதன் வாழ வேறு வழியில்லாத நிலையில் இயற்கையை நோக்கி கோடாரியை ஏந்தினால் அதைப் புரிந்துகொள்ளளலாம். ஆனால், இது அப்படிப்பட்டதல்ல. ஆனால், இது அப்படிப்பட்டதல்ல. பேராசையால் காட்டும் அக்கிரமங்களை இயற்கை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்?

அறிவியல் கண்டுபிடிப்புகளை வானளாவப் புகழவும், ஆன்மிகத்தைக் கண்களை மூடிக்கொண்டு குறைசொல்லவும் செய்யும் மக்கள், அறிவியலின் கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட தீய விளைவுகள், மத தத்துவங்களால் ஏற்படவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெடிமருந்து முதல் அணு குண்டு வரை உள்ள போர்க் கருவிகள் எவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளன! இன்று ஒவ்வொரு நாட்டின் கையிலுள்ள அணுகுண்டுகளைக் குறித்துச் சிந்தித்தால் நிம்மதியாகப் படுத்து உறங்க முடியுமா?

மதங்களுக்கிடையில் கலகங்கள் ஏற்படவில்லையா என்று கேட்கலாம். அங்கும் ஆன்மிக தத்துவங்களில் எந்தக் குறையும் இல்லை, அதைச் சுயநல லாபத்திற்காகத் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தும் மனிதனின் குறைபாடாகும். நாட்டுத் தலைவர்கள் பரஸ்பரம் போர் செய்தது போல், சத்குருமார்கள் தங்களுக்குள் சண்டை போட்டதாக வரலாறு இருக்கிறதா?

அறிவியல் கண்டுபிடிப்புகளை அம்மா நிந்திக்கவில்லை. அவை தேவையே. ஆனால் மனிதன் மனதின் கல்வியையும் கற்க வேண்டும். இன்று அதற்கு எங்குமே வழி இல்லை. எங்கும் மனிதனின் மிருக உணர்ச்சிகளை வளர்க்கக்கூடிய சூழ்நிலைகளே உள்ளன. தினமும் நாளிதழ்களில் வரும் செய்திகளைப் படித்தால், குற்றச் செயல்கள் எவ்வளவு பெருகியுள்ளன என்பதைக் காண முடியும். மனதை இத்தகு தாழ்ந்த நிலையிலிருந்து மீட்பதற்குரிய செயல்களே தியானம், ஜபம் போன்றவை. ஆனால், இதற்கு யாருக்கும் நேரம் இல்லை. 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது சாதனைக்காக ஒதுக்கிவைக்க எத்தனை பேரால் முடிகிறது?

விமானத்தைக் கண்டுபிடித்ததால் 100 மணி நேரம் ஆகும் பபயணத்திற்கு ஒரு மணி நேரம் போதுமானதாக உள்ளது. ஆனால், இதனால் வாழ்கையில் நெருக்கடி குறைந்ததா? இல்லை. அதிகரிக்கவே செய்துள்ளது. அப்படியிருக்க, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையத் தெரியாத மனதிற்கு எவ்வளவு பெற்றாலும் பயன் ஏது? எதிலும் அதிருப்தி மட்டுமே எஞ்சும். மனதின் அமைதி இவற்றைச் சார்ந்து இருக்கவில்லை. அமைதி வேண்டுமா? மனதின் கல்வியைப் பெற வேண்டும். உலகியல் பொருள்களில் எதை அடைந்தாலும் அமைதி இல்லையெனில் பயன் ஏது? அன்பிற்குரிய மனைவி அருகில் இருந்தாலும் வெறுப்பு, சுவைமிகுந்த உணவிலும் சுவையின்மை.

அனைத்தையும் திறந்த மனதுடன் நேசிக்கவும், இயற்கையிடமிருந்து விஷயங்களை கற்றுக் கொள்ளவும் நாம் முன்வர வேண்டும். ஒரு மணி நேரம் சாதனைக்காகச் செலவிட முடியவில்லை எனில், பலனை எதிர்பாராது தொண்டு புரிவதற்காவது சிறிது நேரத்தைச் செலவிட வேண்டும். மீதமுள்ள நேரத்தில் உண்ணவும், உறங்கவும், பொழுதுபோக்கவும் செலவிட்டுக் கொள்ளுங்கள். ஜபம், தியானம், பலனை எதிர்பாராத தொண்டு ஆகியவையே வாழ்வில் விலைமதிப்புள்ளவை ஆகும். மீதமுள்ளவை அனைத்தும் வெறும் பூஜ்யங்கள்! ஒன்று என்ற எண் முன்னால் இருந்தால்தான் பூஜ்யத்திற்கு மதிப்பு உள்ளது.

அனைவரும் அகந்தையின் அடிமைகளாவர். ஆனால், இறைவனின் அடிமையாவது மிகக் கடினம். அகந்தையின் அடிமையாவதால் அமைதியின்மையும், இறைவனின் அடிமையாவதால் அமைதியும் கிடைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் மீது நமக்குள்ள பயபக்தி ஒருநாளும் பலவீனமல்ல. நம்முள் உள்ள நிலையானது எதுவோ அதன் மீது உள்ள அன்புதான் உண்மையான பக்தி.

அல்லாது, ஆலயத்திற்கு முன்னால் நின்று அடுத்த வீட்டுக்காரர்களிடம் உள்ள பொறாமை, வெறுப்பு ஆகியவற்றைச் சொல்லிப் பிரார்த்தனை செய்வது ஒரு நாளும் பக்தியல்ல. அனைவருக்கும் நல்ல மனதைக் கொடுக்க வேண்டும். அமைதியும், நிம்மதியும் நிலவ வேண்டும் என்று பிரார்த்திப்பதே உண்மையான பக்தி. அதுதான் உண்மையான இறை தத்துவம். அந்நிலையில், பிரார்த்தனை செய்பவனின் மனதிலும் அமைதி நிறைகிறது. மாறாக, துரோக சிந்தனை உள்ளவன் தனது அழிவுக்குத் தானே காரணமாகிறான்.
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 37

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum